வாலுவா நகர் புனித ஃபெலிக்ஸ்
ஏழைகளுக்கு நாம் செய்யும் உதவிகள் எதுவும் வீணாய் போகாது என்ற உண்மையை அறிந்தவர். துறவற வாழ்வின் வழியாக கிறிஸ்து அன்பை அனுபவித்தார். நற்பண்புகளின் புண்ணியங்களின் நாயகனாக மக்கள் மத்தியில் வாழ்ந்தார். செல்வந்தக் குடும்பத்தில் பிறந்து வனத்தில் சிறிய குடில் அமைத்து தியானம் செய்த வாலுவா நகர் புனித ஃபெலிக்ஸ் 1127 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 16ஆம் நாள் பிறந்தார்.
செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தாலும் ஏழ்மையை பின்பற்றினார். ஏழைகளை அன்பு செய்தார். ஒருமுறை ஃபெலிக்ஸ் சாலையில் பிச்சைக்காரர் ஒருவரைக் கண்டார். குளிரில் நடுங்கும் ஏழை மனிதனுக்கு தமது மேலங்கியை போர்த்திவிட்டு வீடு திரும்பினார். ஏழை மனிதனுக்கு போர்த்திய ஆடை அவரது கட்டிலில் இருப்பதைக் கண்டார். சின்னச் சிறிய சகோதரர்களுக்கு செய்யும் உதவி கிறிஸ்துவுக்கே செய்கிறோம் என்ற உண்மையைப் புரிந்துக்கொண்டார்.
இளமைப்பருவத்தில் ஆண்டவரை கண்டடைவோர் பேறுப்பெற்றவர் ஆவர். உலக இன்பங்களை வெறுத்து துறவற வாழ்வை தேர்ந்தெடுத்தார். இத்தாலி சென்று ஆல்ப்ஸ் மலையில் இருந்த வயதான துறவிடம் சேர்ந்து கிறிஸ்துவின் அன்பை சுவைத்தார். கொடிய காட்டு விலங்குகளின் மத்தியில் புனிதம் மிகுந்த வாழ்வை இறைவனுக்கு கையளித்தார். நோன்பிருந்து செபித்தார். தூய்மைக்கு இடறல் ஏற்படுத்தும் செயல்களை அகற்றினார்.
ஸ்பெயின், வடஅமெரிக்க போன்ற நாடுகளில் மூர் இனத்தவர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் வாழும் மக்களை மீட்க இறைவன் அழைப்பதை உணர்ந்தார். ஆயரின் துணையும் திருத்தந்தையின் ஆசியுடன் புனித மேத்தா ஜான் என்பவரின் உதவியுடன் மூவொரு இறைவனின் சபை ஆரம்பித்தார். செபத்தின் வழியாக இறைத்திட்டம் உணர்ந்து செயல்பட்ட வாலுவா நகர் புனித பெலிக்ஸ்1212 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 4ஆம் நாள் விண்ணகம் நுழைந்தார். திருத்தந்தை நான்காம் அர்பன் 1666, அக்டேபர் 21ஆம் நாள் புனித நிலைக்கு உயர்த்தினார்.
No comments:
Post a Comment