Saturday 31 July 2021

புனித லொயோலா இஞ்ஞாசியார்


   புனித இஞ்ஞாசியார் ஸ்பெயினில் 1491இல் டிசம்பர் 27ஆம் நாள் பிறந்தார். 15ஆம் வயதில் ஸ்பெயின் நாட்டு அரசவையில் போர் வீரரானார். 1521இல் பம்பலூனா கோட்டையைப் பிரெஞ்சுகாரரிடமிருந்து காப்பாற்றும் போரில் அவரது கால்கள் ஊனமுற்றன. ஓய்வு எடுத்தபோது விவிலியம், புனித பிரான்சிஸ் அசிசியார், புனித சாமிநாதார் சரிதை படித்து மனந்திரும்பினார். 

    1522இல் மார்ச் 25ஆம் நாள் அன்னை மரியா வழி இயேசுவுக்கு தன்னை அர்ப்பணித்தார். குருவாக அருள் பெற்று படித்தோருக்கும், பாமரருக்கும் நற்செய்தி போதித்தார். தவறிய பெண்களுக்கு வழிகாட்டி, நோயுற்றோரை நலமாக்கினார். ஒருநாள் 7 மணிநேரம் இறைவனோடிருந்தார். 1534இல் இறை இயேசுவின் சேவகர்கள் சபை தொடங்கினார். இதயத்தில் இயேசுவை சுமந்து அயலானின் மீட்புக்காகவும், இறைவனின் அதி உன்னத மகிமைக்காகவும் இறையாட்சி பணி செய்து 1556, ஜூலை 31ஆம் நாள் இறந்தார்.     

Tuesday 20 July 2021

புனிதர்களான எலியாஸ், ஃபிளேவியன்

    புனிதர்களான எலியாஸ் மற்றும் ஃபிளேவியன் வீசுவாத்தின் வீரரார்கள். எலியாஸ் அரபு நாட்டில் பிறந்து துறவு மடத்தில் கல்வி கற்று விசுவாசத்தில் வளர்ந்தார். 457ஆம் ஆண்டு பாலஸ்தீனாவிற்கு சென்று யுத்திமுஸ் என்பவரின் உதவியில் வாழ்ந்தார். ஜெரிக்கோ என்ற குழுமத்தை நிறுவினார். குருத்துவம் வழி இறைவனின் திருவுளம் நிறைவேற்றினார். 494இல் எருசலேம் மறைத்தந்தையானார். அந்தியோக்கு மறைத்தந்தை ஃபிளேவியன் என்பவருடன் தோழமை உறவு கொண்டிருந்தார். இரண்டு மறைத்தந்தையர்களும் ஓரியல்பு கோட்பாடு எதிராக குரல் கொடுத்தனர். பேரரசர் முதலாம் அனஸ்தாசியுஸ் ஓரியல்பு கோட்பாட்டை ஆதரித்தார். பேரரசர், எலியாஸ் மற்றும் ஃபிளேவியன் இருவரையும் ஓரியல்பு கோட்பாட்டை ஏற்றுக்கொள்வதாகக்கூறி ஆவணத்தில் கையொப்பம் போட சொன்னார். மறுத்த எலியாஸ், ஃபிளேவியன் இருவரையும் 516ஆம் ஆண்டு அய்லா என்ற இடத்திற்கு நாடுகடத்தினார். செல்லும் வழியில் ஃபிளேவியன் இறந்தார். அய்லாவில் எலியாஸ் இறந்தார்.                                                         

Monday 19 July 2021

🔹ஜூலை -18🔹 புனித ஃபிரட்ரிக்

புனித ஃபிரட்ரிக் 780இல் ஃபிரிஸ்லாந்தில் பிறந்தார். இறையன்பில் வளர்ந்து திருநூல் படிப்பின்மீது ஆர்வம் கொண்டு உட்ரெக்ட் நகருக்கு சென்றார். ஆயர் ரிக்ஃபிரிட் கரங்களால் குருவானார். வால்செரன் பகுதியில் கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு கிறிஸ்துவின் விழுமியங்களையும் நலம்தரும் நற்செய்தியையும் போதித்தார். சமூகத்தில் நிலவிய தவறுகளையும் ஒழுக்கமற்றவர்களின் வாழ்வையும் சுட்டிகாட்டினார். இதனால் மக்களின் எதிர்ப்பை சந்தித்தார். 

   ஃபிரட்ரிக் 816ஆம் ஆண்டு உட்ரெக்ட் மறைமாவட்ட ஆயரானார். 829இல் மைன்ஸில் நடந்த ஆயர் மன்றத்தில் கலந்துக்கொண்டு இறைஞானம் மிகுந்த வார்த்தைகளை பேசினார். இவரது பணிகளை விரும்பாதோர் இவர்மீது பொய்குற்றம் சுமத்தியபோது இறையருளால் அமைதி காத்தார். 388, ஜூலை 18ஆம் நாள் திருப்பலி நிறைவேற்றி கடவுளுக்கு நன்றி கூறியபோது எதிரிகள் இரண்டு போர் அவரை வெட்டி கொலை செய்தனர்.                                          

🌷புனித அலெக்சியார்

    புனித அலெக்சியார் உரோமையில் 4ஆம் நூற்றாண்டில் பிறந்தார். வளனார் என்ற மெய்யடியாரிடம் கல்வியும், சாத்திரங்களையும், கலைகளையும் கற்றார். ஏழைகள்மீது தீராத பாசம் கொண்டு தனது செல்வங்களை அனைவருக்கும் வழங்கினார். பக்தியிலும், அறிவிலும் வளர்ந்து விண்ணக வாழ்வில் நாட்டம் கொண்டார். உலகைத் துறந்து கடவுளை தனதாக்கிட மண்ணாசை, பொருளாசை, உடலாசைகளை முற்றிலும் துறந்தார். 

  அலெக்சியார் இறைவா! நான் கற்பு நெறி தவறாமல் தரணியில் வாழ அருள்புரிவீர் என்றார். பெற்றோர் அவருக்கு திருமணம் செய்தனர். அலெக்ஸ் தவம் மேற்கொள்ள வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் புறப்பட்டார். எடேஸ்ஸôவில் 17ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து மக்களுக்கு நன்மைகள் செய்தார். அவரது பெயரும், புகழும் நாடெங்கும் பரவியபோது தவம் குலைந்துவிடும் என்று அஞ்சி தனது நாட்டில் யாருக்கும் தெரியாமல் தன் வீட்டில் தங்கி வீரர்களின் துன்புறுத்தலை ஏற்று இறந்தார். பெற்றோர் தனது மகன் அலெக்ஸ் என்று அறிந்ததும் துயருற்று அழுது  நல்லடக்கம் செய்தனர்.                  

புனிதர்கள் ஜஸ்தா மற்றும் ருஃபீனா

    

   ஸ்பெயின் நாட்டில் புனித ஜஸ்தா 268ஆம் ஆண்டும் ருஃபீனா 270ஆம் ஆண்டு செல்வத்தில் ஏழைகளானாலும் இறையன்பின் செல்வந்தர்களாக பிறந்தனர். கிறிஸ்தவ விழுமியங்களுக்கு நற்சான்று நல்கி அனைவருக்கும் உதவினர். மண்பாத்திரம் தொழில் செய்தனர். வேற்றினத்து தெய்வத்தை வழிபட்டவர்கள் தங்கள் தெய்வத்திற்கு வழிபாடு செய்ய மண்பாத்திரம் கேட்டபோது ஜஸ்தா, ருஃபீனா இரண்டு சகோதரிகளும் மறுத்தனர். வேற்றினத்தார் இவரது மண்பாத்திரங்களை உடைத்து வீட்டிற்கு தீவைத்து துன்புறுத்தினர். 

இறுதியில் ஜஸ்தா மற்றும் ருஃபீனா ஆளுநன் டயோஜெனியனுஸ் முன் நிறுத்தி கிறிஸ்துவை மறுதலிக்க இரும்பு கம்பியால் அடித்தனர். கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையில் உறுதியுடன் இருந்ததால் சிறையில் அடைத்து உணவின்றி துன்புறுத்தினர். ஜஸ்தா கிறிஸ்துவின் பொருட்டு உணவின்றி இறந்தபோது அவரது உடலை கிணற்றில் வீசினர். ருஃபீனாவை தலைவெட்டி கொலை செய்தனர்.                                                                                                                                                    

Friday 16 July 2021

புனித மேரி மேடலின் போஸ்டல்

   

   புனித மேரி மேடலின் போஸ்டல் பிரான்ஸில் 1756, நவம்பர் 28ஆம் நாள் பிறந்தார். ஆசிர்வாதப்பர் துறவு இல்லத்தில் கல்வி கற்றார். இயேசுவின்மீது அன்பு கொண்டு கற்பு வார்த்தைப்பாடு எடுத்து இடைவிடாமல் இறைபிரசன்னத்தில் வாழ்ந்தார். பிரெஞ்சு புரட்சி காலத்தில் தனது வீட்டில் திருப்பலி நடத்த ஏற்பாடு செய்தார். தனது வீட்டில் நற்கருணை வைத்திருக்கவும், இறக்கும் நிலையில் இருக்கிறவர்களுக்கு நோயில் பூசுதல், நற்கருணை வழங்கவும் அனுமதி பெற்றார். 

  புனித மேரி மேடலின் போஸ்டல்  கடவுள் எப்போதும் தம்முடன் இருக்கிறார் என்பதை உணர்ந்து அச்சமின்றி நற்செயல்கள் செய்தார். சிறியவர், இளைஞர், முதியோர் அனைவரும் விசுவாசத்தில் உறுதியுடன் வாழ அயராது உழைத்தார். 1805இல் இரக்கமிகு சகோதரிகள் சபையை ஆரம்பித்து தனது இறைபணியை விரிவுப்படுத்தினார். கல்வி நிறுவனங்கள் வழி நம்பிக்கையை பகிர்ந்தளித்தார். போராட்டங்கள், அச்சுறுத்தல்கள் மத்தியில் துணிவுடன் இறைபணி செய்த போஸ்டல் 1846ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் நாள் இறந்தார்.                                                 

Thursday 15 July 2021

புனித பொனவெந்தூர்

 


புனித பொனவெந்தூர் இத்தாலியில் 1218ஆம் ஆண்டு பிறந்தார். குழந்தைப்பருவத்தில் நோயால் பாதித்து இறக்கும் தருவாயில் புனித அசிசியாரிடம் வேண்டல் செய்து நலம் அடைந்ததால் அசிசியாரிடம் பக்தி கொண்டார். முனைவர் பட்டம் பெற்று 1248ஆம் ஆண்டு முதல் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியரானார். புனித தாமஸ் அக்குவினாஸ் இவரது நண்பர். 22ஆம் வயதில் புனித பிரான்சிஸ் துறவு சபையில் சேர்ந்தார். தாழ்ச்சியின் வழியில் பயணித்து தூயவரானார். 

        பொனவெந்தூர் 1257இல் சபை தலைவரானார். கடின உழைப்பு, ஒறுத்தல் வழி சபையில் அமைதி ஏற்படுத்தினார். ஏழ்மையும், தாழ்ச்சியும் பின்பற்றி அன்புடன் நோயளிகளை நலமாக்கினார். தியானம், செபம், தவம், நற்கருணை ஆராதனைக்காக நேரங்களை செலவிட்டார். மூவேளை செபம் மாலை 6 மணிக்கு செய்வதை நடைமுறைப்படுத்தினார். சனிக்கிழமை அன்னை மரியாவுக்கு திருப்பலி ஒப்புக்கொடுத்தார். 1273இல் கர்தினால் ஆனார். 1274இல் கிறிஸ்தவ ஒன்றிப்பு சங்கத்தில் பங்கேற்றபோது ஜூலை15ஆம் நாள் இறந்தார்.     

Wednesday 14 July 2021

புனித கமில்லஸ் தே லெல்லிஸ்

 

   புனித கமில்லஸ் தே லெல்லிஸ் இத்தாலியில் 1550இல் பிறந்தார். இறைபக்தியில் வளர்ந்து முன்மதியோடு செயல்பட்டார். இளமையில் நெப்போலியன் போர்படையில் படைவீரரானார். படை முகாமில் சூதாட்டத்திற்கு அடிமையானார். போரின்போது 2 கால்களிலும் காயங்கள் ஏற்பட்டதால் போர்களத்திலிருந்து வெளியேறி உரோமையில் மருத்துவமனையில் பணியாற்றினார். 

    உழைப்பும் திறமையும் மிகுந்த கமில்லஸ் கப்புச்சன் சபை பொதுநிலை சகோதரர் பிரிவில் சேர்ந்தார். புனித பிலிப்பு நேரியின் வழிகாட்டுதல் பெற்று புனிதப்பாதையில் பயணித்தார். தனது 32ஆம் வயதில் இயேசு சபை கல்லூரியில் இலத்தின் பயின்று குருவானார். 1584ஆம் ஆண்டு நல்மரணத்தின் தந்தையர்கள் என்ற சபையை தோற்றுவித்து பிளேக் நோய் பாதிக்கப்பட்வர்களுக்கு பணி செய்தார். நோயளிகள்மீது கருசனை கொண்டு இறைவல்லமையால் புதுமைகள் செய்தார். துன்பங்களில் மரியாவிடம் சரண் அடைந்தார். சபையின் தலைவராக நற்செய்தி அறிவித்த கமில்லஸ் 1614, ஜøலை 14ஆம் நாள் இறந்தார்.                                

Tuesday 13 July 2021

இயேசுவின் புனித தெரசாள் லாஸ் ஆன்டஸ்


    புனித தெரசாள் லாஸ் ஆன்டஸ் அமெரிக்காவில் 1900, ஜூலை13ஆம் நாள் பிறந்தார். பக்தியில் வளர்ந்து திருப்பலி வழி நற்கருணை ஆண்டவரை சொந்தமாக்கினார். அன்னை மரியாவை பாதுகாவலியாகவும், வழிகாட்டியாகவும், ஆசிரியையாகவும் தேர்ந்தெடுத்தார். நற்கருணை பெற்றநாள், “இயேசு கிறிஸ்துவின் அன்பு வலையில் நான் சிக்கிக்கொண்டேன்” என்றார். குழந்தை ஏசுவின் புனித தெரசாள் சரிதைப் படித்து 1919இல் கார்மெல் துறவு மடத்தில் சேர்ந்தார். 

    தெரசாள் லாஸ் ஆன்டஸ்  இறைபிரசன்னத்தில் நிலைத்திருந்து நோயாளிகள் நலம்பெற இறைவேண்டல் செய்தார். கிறிஸ்துவின் ஏழ்மையில் பங்குபெற ஏழ்மையாக வாழ்ந்தார். செபவாழ்வு, குருக்களுக்கு செபிப்பது, இறைவனை அன்பு செய்வது, இறைவார்த்தையை தியானிப்பது போன்ற விதிகளை பின்பற்றினார். “இறைவனோடு வாழ்வது மண்ணில் விண்ணமன்றோ. பிறருக்கு இரக்கமும், நமக்கு கண்டிப்பும் கொண்டிருப்போம்” என்றுகூறி 1920, ஏப்ரல் 12ஆம் நாள் இறந்தார்.                                                                                                                                          

Monday 12 July 2021

புனித யோவான் கால்பர்ட்


  புனித யோவான் கால்பர்ட் 999இல் ஃபுளோரன்ஸ் நகரில் பிறந்தார். பெற்றோரின் வாழிகாட்டுதலால் கிறிஸ்துவ விசுவாசத்திலும், பக்தியிலும் வளர்ந்து இறையன்பையும், ஆசீரையும் சுவைத்தார். தனது சகோதரனை கொலை செய்தவனை கிறிஸ்துவின் பெயரால் மன்னித்தார். தன்னை துன்புறுத்தியவர்களை அன்பு செய்தார். இறைவல்லமையும், அன்பையும் உணர்ந்தபோது புனித ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து செபம், தவம், ஒறுத்தல்கள் வழி புனிதமடைந்தார். 

   யோவான் கால்பர்ட்  ஆசிர்வாதப்பர் சபை ஒழுங்குகளையே பின்பற்றி வல்லம்ரோசா துறவு மடம் ஆரம்பித்தார். ஏழைகளின் தேவைகளை அக்கறையுடன் நிறைவேற்றினார். தன்னை நாடிவருவோரின் பசியை போக்கிட பொருள் வைப்பு அறையிலுள்ள பொருட்களை செபத்தின் வழியாக பெருக்கினார். நற்கருணை ஆண்டவரை தஞ்சமாகவும், அன்னை மரியாவை துணையாகவும் கொண்டிருந்த யோவான் 1073, ஜூலை 12ஆம் நாள் இறந்தார்.

Sunday 11 July 2021

புனித ஆசீர்வாதப்பர்

         

    புனித ஆசீர்வாதப்பர் 480ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தார். உழைக்கவும், செபிக்கவும், எல்லோருக்கும் முன்மாதிரியானார். தனது அறையில் அன்னை மரியாவின் திருச்சொரூபம் வைத்து தீபம் ஏற்றி செபித்தார். உலக இன்பங்களை துறந்து 20ஆம் வயதில் குகையில் இறைவனை தியானித்து செபம், தவம், கடின ஒறுத்தல்கள் செய்தார். திருச்சிலுவையை தனது வாழ்வின் புகலிடமாகவும், ஆறுதலாகவும், செல்வமாகவும் கொண்டிருந்தார். 


   ஆசீர்வாதப்பர் வாழ்வின் சோதனைகளை செபத்தால் வென்றார். தன்னைத் தேடிவந்த மக்களின் ஆன்மீக வாழ்வுக்கு வழிகாட்டி நோய்களை நலமாக்கினார். வறியவர்களுக்கு பொருளும், உணவும் வழங்கினார். துறவிகளுக்கு தலைமை தாங்கி கடின விதிமுறைகளை வழங்கியதால் ஆசீர்வாதப்பரை தலைவராக ஏற்க மறுத்தனர். ஆசீர்வாதப்பர் குடிக்கும் நீரில் விஷம் கலந்தபோது சிலுவை வரைந்ததும் குவளை உடைந்தது. 547, மார்ச் 21ஆம் நாள் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பருகி இறந்தார்.   

Saturday 10 July 2021

புனித ஃபெலிசித்தா, அவரது ஏழு மகன்கள்

  

        புனித ஃபெலித்தா மற்றும் அவரது ஏழு மகன்களும் உரோமையில் வாழ்ந்தனர். ஃபெலித்தா தான் கிறிஸ்தவர் என்பதில் பெருமை கொண்டு கனிவின் வார்த்தைகளால் அனைவரையும் அன்பு செய்தார். தனது 7 பிள்ளைகளுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்து கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்த்தினார். கிறிஸ்துவை மீட்பராகவும், ஆரசராகவும் ஏற்று கிறிஸ்தவ வாழ்வுக்கு சான்று பகர்ந்த ஃபெலித்தா, அவரது 7 மகன்களும் வேதவிரோதிகள் கைது செய்து சிறையில் அடைத்து கிறிஸ்துவை மறுதலிக்க துன்புறுத்தினர். 


       கிறிஸ்துவின் பொருட்டு துன்பங்களை மகிழ்வுடன் ஏற்ற ஃபெலிசித்தா தனது ஏழு மகன்களிடம், “பிள்ளைகளே! வானத்தை அண்ணார்ந்து பாருங்கள். இயேசு உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். அவரின் அன்பில் நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் ஆன்மாவைக் காத்துக்கொள்ள உறுதியுடன் போராடுங்கள்” என்றார். 165ஆம் ஆண்டு ஃபெலிசித்த அவரது மகன்களை கசையால் அடித்தும், தடியால் அடித்தும், தலைவெட்டியும் கொலை செய்தனர்.   

Friday 9 July 2021

புனித எஸ்பேரியஸ், ஸோவே

    

   புனிதர்களான எஸ்பேரியஸ் மற்றும் ஸோவே இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ தம்பதிகள். இவர்கள் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர். பம்பிலியாவில் கிறிஸ்துவை அறியாத கட்டுலஸ் என்பவரின் வீட்டில் அடிமைகளாக வேலை செய்தனர். முதலாளி கட்டுலஸ்க்கு மகன் பிறந்ததும் அவர் வழிபடும் தெய்வ சிலைக்கு படையல் கொடுக்க ஏற்பாடு செய்தான். அந்நிகழ்வில் அப்பகுதி மக்கள் அனைவரும் பங்கேற்றனர். 

     எஸ்பேரியஸ் குடும்பம் பங்கேற்கவில்லை. முதலாளி ஸ்பேரியஸ் குடும்பத்தை அழைத்து கோபத்துடன் அவர் வணங்கும் தெய்வ சிலையை வணங்குமாறு சொன்னான். கிறிஸ்துவை அரசராக ஏற்ற ஸ்பேரியஸ், úஸôவே இருவரும் தலைவனின் கட்டளையைப் புறக்கணித்து என்றும் வாழும் கிறிஸ்துவை அரசராக அறிக்கையிட்டனர். கோபம் அடைந்த கட்டுலஸ், எஸ்பேரியஸ் அவரது மனைவி இரண்டு குழந்தைகளையும் கொன்று நெருப்பு சூளைக்கு தூக்கிப்போட்டனர். கிறிஸ்தவ விசுவாசத்திற்கு சான்றாக வாழ்ந்த எஸ்பேரியஸ் அவரது குடும்பமும் 127ஆம் ஆண்டு இறந்தனர்.


Wednesday 7 July 2021

புனித பான்றேனஸ்


புனித பான்றேனஸ் இத்தாலியில் பிறந்தார். சாக்ரடீஸ் கொள்கையை பின்பற்றினார். கிறிஸ்தவர்களுடன் தொடர்பு கொண்டு கிறிஸ்துவையும் அவரது கோட்பாடுகளையும் நன்கு கற்றார். புனித மாற்குவின் சீடர்கள் நடத்தி வந்த மறைப்பள்ளியல் படித்து இறையறிவில் வளர்ந்து அப்பள்ளிக்கு தலைவரானர்.      இறைவாக்கினர்கள், திருத்தூதர்களின் போதனையை உள்வாங்கினார். 

      பான்றேனஸ் இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து ஞானமும், அறிவுதிறனும் பெற்று தாழ்ச்சியுடன் வாழ்ந்தார். தனது வாழ்வை நெறிப்படுத்தி இறைவனுக்கு உகந்தவரானார். திருத்தூதர்களின் சிந்தனைகளை மக்களுக்கு போதித்தார். அமைதியின் கடவுளை சொந்தமாக்கி அமைதியில் வாழ்ந்தார். தன்னிடம் வந்தவர்களை இறையன்பால் இறைபிரசன்னத்தால் நிறைத்தார். நற்செய்தி இந்தயாவிலும் அறிவித்து எண்ணற்றோரை மனமாற்றினார். கிறிஸ்துவின் பாதத்தடங்களில் நடந்து ஓர் இறைவாக்கினராக இறைபணி செய்த பான்றேனஸ் 216ஆம் ஆண்டு இறந்தார்.                                                                                                         

புனித மரிய கொரற்றி

   

         புனித மரிய கொரற்றி 1890ஆம் ஆண்டு இத்தாலியில் ஏழ்மை, அன்பு, பக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்தார்.   அன்னை மரியாவின் அரவணைப்பில் தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணித்தார்.  இறைவார்த்தையை தியானித்து இறையன்பின் செல்வந்தரானார். காலையும் மாலையும் செபமும், செபமாலையும் செபித்து தூயவரானார். 12ஆம் வயதில் முதன் முறையாக நற்கருணை பெற்று இயேசுவுடன் உறவாடினார். 


         மரிய கொரற்றியின் குடும்பம் உரோமை சென்று மாசெலெனி பிரபு வீட்டில் வேலை செய்தனர். அதேவீட்டில் தீயப்பழக்கங்களுக்கு அடிமையான அலெக்ஸாண்டரும் இருந்தான். அலெக்ஸாண்டர் மரிய கொரற்றியை பாவம் செய்யத் தூண்டினான். தூயவரான கொரற்றி பாவம் செய்யக்கூடாது என்றார். மரிய கொரற்றி வீட்டில் தனிமையில் இருந்தபோது அலெக்ஸாண்டர் தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தினான். மறுத்த மரிய கொரற்றியை தரதரவென்று மாடிக்கு இழுத்து சென்று கத்தியால் 14 முறை குத்தி ஜூலை 6ஆம் நாள் கொலை செய்தான். 

Monday 5 July 2021

புனித அந்தோனி மரிய சக்கரியா

     

      புனித அந்தோனி மரிய சக்கரியா 1502ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தார். தாயன்பிலும் இறைபக்தியிலும் வளர்ந்து கல்வி கற்றார். ஏழைகளிடத்தில் அன்பும் இரக்கம் கொண்டு உதவினார். தனது 22ஆம் வயதில் மருத்துவரானார். நம்பிக்கையும், இறைபற்றும் மிகுந்த அந்தோனி இறையில் கற்று 1528ஆம் ஆண்டு குருவானார். நோயாளிகளுக்கு மருத்துவம் செய்து ஆறுதல் கூறினார். சிறை கைதிகளுக்கு கிறிஸ்துவின் அன்பை பகர்ந்தார். 

     

        சக்கரியா மிலான் சென்றபோது மக்கள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு துயருற்றவர்களுக்கு உதவினார். மக்களின் ஆடம்பர வாழ்வு, ஏற்றத்தாழ்வுகள், அரசியல் கொள்கைகள், லூத்தர் போதனையால் திருச்சபையில் பிளவுகள் ஏற்பட்ட நிலையை கண்டார். மக்களுக்கு உதவிட சக்கரியா 5 சகோதரர்களுடன் துறவு சபை நிறுவினார். இறைவார்த்தை, திருச்சபையின் விசுவாச உண்மைகளை போதித்தார். மக்கள் திருச்சிலுவை மீது அன்பு கொண்டு சிலுவையில் அடைக்கலம் தேடவும், நற்கருணை ஆராதனை செய்யவும் கற்பித்த சக்கரியா 1039ஆம் ஆண்டு இறந்தார்.

Sunday 4 July 2021

போர்ச்சுக்கல் நாட்டு புனித எலிசபெத்

 

   போர்ச்சுக்கல் நாட்டு புனித எலிசபெத் போர்ச்சுக்கல் நாட்டில் 1271ஆம் ஆண்டு பிறந்தார். எலிசபெத் அரண்மனையில் வாழ்ந்தாலும் ஏழ்மையில் வாழ்ந்தார். ஏழைகளுக்கு உதவி செய்து ஆனந்தம் அடைந்தார். அறநெறி வாழ்விலும் ஒழுக்கத்திலும் இறைபக்தியிலும் இறைவனுக்கு உகந்தவரானார். 12ஆம் வயதில் போர்ச்சுக்கல் நாட்டு இளவரசர் டென்னிஸ் என்பவரை திருமணம் செய்தார். 


    எலிசபெத் அரண்மணை வாசிகளிடம் அன்புடன் பழகினார். கணவரின் துன்புறுத்தலுக்கு உள்ளானபோது இறைவேண்டல் வழி கணவரை மனம்மாற்றினார். இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். ஏழைகள், நோயாளிகள், தனிமையில் வாடுவோர் அனைவருக்கும் உதவினார். கணவர் இறந்தப்பின் மூன்றாம் பிரான்சிஸ் அசிசியார் சபையில் துறவு மேற்கொண்டு ஏழைகள், நோயுற்றோர் மத்தியில் பணி செய்தார். மக்கள் மனதில் இறையமைதி ஏற்படுத்திய எலிசபெத் 1336ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 4ஆம் நாள் இறந்தார். 

Saturday 3 July 2021

புனித தோமையார்

 

 புனித தோமையார் கலிலேயாவில் ஏழை மீனவப் பெற்றோருக்கு பிறந்தார். 12 திருத்தூதர்களுள் ஒருவர். கிறிஸ்துவின்மீது பற்றுகொண்டு வாழ்ந்தார். உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள் என்றுகூறிய கிறிஸ்துவின் வார்த்தையை அறிவிக்க இந்தியா வந்தார். தச்சு தொழில் செய்பவராக தட்சசீலம் என்ற இடத்தில் தனது போதனையை ஆரம்பித்தார். அரசர் அரண்மனை கட்டித்தருமாறுப் பணம் தோமாவிடம் கொடுத்தார்.                                                                                                                                                        

    தோமையார் அரசனிடமிருந்து பெற்ற பணத்தை ஏழைகளுக்கு உதவினார். இதனால் அரசன் தோமாவை சிறையில் அடைத்தான். அரசனின் சகோதரன் காத் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து தனது அண்ணன் கனகவில் தோன்றி, விண்ணகத்தில் தோமா கட்டியுள்ள அரண்மனையில் நான் நலமோடு இருக்கிறேன். அவரை ஒன்றும் செய்துவிடாதே என்றார். அரசன் மனம் மாறினான். 52ஆம் ஆண்டு கேரளா வந்தார். அரசன் மாஸ்டாய் என்பவரின் மனைவி மக்கள் மற்றும் ஏராளானோர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் தோமாவைப் பெரியமலை பகுதியில் ஈட்டியால் குத்தி கொலை செய்தார்கள்.

Friday 2 July 2021

புனிதர்கள் ப்ரோசெசு மற்றும் மார்டினியன்

 

   நீரோவின் மறைக்கலகத்தின் போது திருத்தூதர்களான பேதுரு மற்றும் பவுல் இருவரும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறை காவலர்களிடம் கிறிஸ்துவை எடுத்துரைத்தனர். காவலர்கள் புனித ப்ரோசெசு மற்றும் மார்டினியன் திருத்தூதர்களின் போதனையால் ஈர்க்கப்பட்டு மனம்மாறி திருமுழுக்கு பெற்று கிறிஸ்துவின் விழுமியங்களுக்கு சான்று பகர்ந்தனர். 

        இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் பருகினர். திருத்தூதர்கள் அறிவித்த  செய்தியை கிறிஸ்தவர்களுக்கு அறிவித்தனர். இதையறிந்த சிறை அதிகாரி ப்ரோசெசு, மார்டினியன் இருவரையும் அழைத்து உரோமை தெய்வமான ஜøபிடருக்கு தூபம் காட்டுமாறு கூறினார். காவலர்கள் இயேசுவின் திருநாமம் போற்றப்படுவதாக என்று புகழ்ந்தனர். இதனால் ப்ரோசெசு மற்றும் மார்டினியன் இருவருக்கும் மரணதண்டனை விதித்தனர். கிறிஸ்துவை அரசராகவும் மீட்பராகவும் ஏற்றுக்கொண்டதால் ப்ரோசெசு, மார்டினியன் இருவரின் தலை வெட்டப்பட்டு மறைசாட்சியானார்கள். 

Thursday 1 July 2021

புனித கால்

 
    புனித கால் 489இல் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் பெற்ற குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தபோது யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து புறப்பட்டு கோர்னோனில் துறவு இல்லம் சென்றார். துறவு இல்லத்தின் தலைவர் பெற்றோரின் அனுமதி பெற்று வரக்கூறினார். இறைதஞ்சமுடன் வீட்டிற்கு வந்து தனது விருப்பம் தந்தையிடம் கூறினார். தந்தை இறை திருவுளம் அறிந்து கால் துறவு மேற்கொள்ள அனுமதியும் ஆசிரும் அளித்தார். 

    அன்னை மரியாவிடம் பக்தி கொண்டு இறையாட்சி பணி செய்ய குருவானார். ஆயரின் ஆலோசகராக நியமனம் பெற்றார். அன்பின் கனிவின் வார்த்தைகளால் தீயோரை நல்வழிப்படுத்தினார். அறிவிலும் திறமையிலும் வளர்ந்து இறைவார்த்தை வாழ்வாக்கி போதித்தார். ஆஸ்ட்ரேசியாவில் நற்செய்தி அறிவித்தபோது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சிறை துன்பங்களை மகிழ்வுடன் ஏற்று விடுதலையானார். 527ஆம் க்ளேர்மோன்ட் மறைமாவட்டத்தின் ஆயரானார். தீயவர்களை மனமாற்றி கால் 553ஆம் ஆண்டு இறந்தார்.