ஒரு தாயானவள் தனது பிள்ளைகள்மீது வைக்கும் பாசம் இயற்கையானது. தாய்க்கு நிகர் தாயே. தாய் என்றால் அன்பும் ஆதரவும், பண்பும் பாசமும், நேர்மையும் நேசமும், தியாகமும் இரக்கமும், கனிவும் ஈகையும் நிறைவாகப் பெற்றவர். இதையே கவிஞர் ஒருவர், “தாயன்பை எடுத்துரைக்க உலக மொழிகளில் போதிய வார்த்தைகளே இல்லை” என்கிறார். ஆம்! சாதாரண மனிதனை ஈன்ற தாயை வருணிக்கப்போதிய வார்த்தைகளே இல்லை என்றால், விண்ணையும் மண்ணையும் எக்காலத்தும் ஆள்கின்ற கிறிஸ்து அரசரை ஈன்ற தாயை நாம் எவ்வாறு வருணிக்க முடியும். இதையே புனித அகுஸ்தினார், “ஒரு மனிதனின் உடலுள்ள உறுப்புகளெல்லாம் நாக்குகளாக மாறினும் மரியன்னையை அவருடைய தகைமைக்கு ஏற்றவாறு புகழ முடியாது” என்கிறார்.
அன்னை மரியா இறைவனின் தாய்; நம் ஒவ்வொருவரின் தாய். இதையே எசபெத் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரத்த குரல், “என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” என்று கேட்கிறார். மரியா ஆண்டவரின் தாய் என்றால், உண்மையிலேயே இறைவனின் தாய். கி.பி 431ஆம் ஆண்டு எபேசில் கூடிய பொதுச்சங்கம், “இம்மானுவேல் உண்மையிலேயே கடவுள்; எனவே பேறுபெற்ற கன்னி மரியா உண்மையிலேயே இறைவனின் தாய்; ஏனெனில் அவர் கடவுளிடமிருந்து பிறந்த வார்த்தையானவரை ஊனுடல் ஈன்றெடுத்தார். எவரொருவர் இதை ஏற்றுக்கொள்ளவில்லையோ அவர் சபிக்கப்பட்டவராவார்” என்று தெளிவாகக் கூறுகிறது. நாம் சபிக்கப்பட்டவர்களாய் மாறாமல் அன்னை மரியா இறைவனின் தாய் என்றும், சிறப்பாக நம் ஒவ்வொருவரின் தாயாகவே ஏற்றுக்கொள்வோம்.
மரியா, கடவுள்மீது கொண்டுள்ளப் பேரன்பால் நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்கிறார். புனித யோவான் பெர்க்மான்ஸ், “ஆ! மிகவும் இனிய மாமரியே! தங்களை அதிகமாக அன்பு செய்பவன் பேறுபெற்றவன். மரியாவை நான் அன்பு செய்தால், நிச்சயம் விண்ணகத்தில் உறுதியுடனிருப்பேன். கடவுளிடமிருந்து கேட்பவற்றையெல்லாம் பெற்றுக்கொள்வேன்” என்றார். புனித பிரான்சிஸ் சலேசியார், “அம்மா மாமரியே! நான் நித்திய நரகத்திற்குச் செல்லாமருக்க, இவ்வுலகில் பாவம் செய்யாமல் இறைவனையும், உம்மையும் அதிகமாக அன்பு செய்து தூய்மையுடன் வாழ வேண்டும்” என்று மன்றாடினார்.