Sunday 11 February 2018

புனித லூர்து அன்னை

 
            பிரான்ஸ் நாட்டில் 1858ஆம் ஆண்டு பெர்னதெத் என்ற சிறுமி, தனது தங்கை மேரி மற்றும் உறவினர் யோவான் ஆகியோருடன் சேர்ந்து விறகு சேகரிக்க கேவ் ஆற்றங்கரைப் பகுதிக்குச் சென்றார். அப்பகுதியில் தண்ணீர் குகை இருந்தது. அது மசபியேல் குகை என்று அழைக்கப்பட்டது. தண்ணீர் குகையைக் கடந்து செல்ல வேண்டும். 
பெர்னதெத் குளிரால் தண்ணீரில் கால் வைக்க முடியாமல் தயங்கி நின்றார். அப்போது பலமான காற்று வீசியது சுற்றிலும் பார்த்தார். அருகிருந்த குகையில் ஓர் அற்புதமான காட்சியைக் கண்டார். “அமல உற்பவியான அன்னை மரியா, எழில் மிக்க ஓர் இளம் பெண்ணாகத் தோற்றமளித்தார். அன்னையின் முகம் விண்ணக ஒளியினால் பிரகாசித்தது. நீண்ட வெள்ளைநிற ஆடையணிந்து, இடையில் நீலநிற இடைக்கச்சைக் கட்டியிருந்தார். பாதங்கள் மஞ்சள் நிற ரோஜா மலர்களால் அழகு செய்யப்பட்டிருந்தன. கரத்தில் செபமாலை தொங்கியது. மரியா பெர்னதெத்தைத் தன்னுடன் சேர்ந்து செபமாலை செபிக்க அழைத்தார்.” சிறிது நேரத்திற்குப் பின் அன்னை மரியா மறைந்தார். இவ்வாறு பல நாட்கள் தோன்றினார்.





            பெர்னதெத் தான் கண்ட காட்சியை வீட்டிற்குச் சென்று தன் தாயிடம் கூறினார். “அம்மா! அந்த அழகான சீமாட்டியைப் பார்த்துக் கொண்டே இருக்க விழைகின்றேன். அவர் யார் என்று தெரியவில்லை” என்றார். தாய்“ இது எல்லாம் அலகையின் தந்திரம். இனி நீ அங்கு செல்லக் கூடாது” என்றார். மீண்டும் விறகு சேகரிக்கச் சென்ற பெர்னதெத், அன்னை மரியாவைத் தரிசித்தார். இந்தச் செய்தியைக் கேட்ட சிலர் நம்பினார்கள். பலர் ஏளனமாகப் பேசினர். அன்னை மரியா, ஒருநாள் முகத்தில் பெரும் துயரத்துடன் காணப்பட்டார். பெர்னதெத், “அம்மா, ஏன் இன்று வருத்தமாக இருக்கின்றீர்கள்”என்று கேட்டார். அன்னை மரியா, “மகளே! உலகில் எண்ணற்ற மக்கள் கடவுளைப் புறக்கணித்து பாவம் செய்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மனம்மாற நீ செபமாலை செபிக்க வேண்டும்” என்றார். மற்றொரு நாள் “தவம்! தவம்! தவம்!” என்று அன்னை கூறினார். அன்னையின் அறிவுரைக்கேற்ப “பாவிகள் மனம்மாற செபமாலை செபிப்பேன். தவ முயற்சிகள் செய்வேன்” என்று உறுதிகொண்டார். இதைக் கேள்விப்பட்ட தலைவர்கள், காவலர்கள் பெர்னதெத்தைக் குகைக்குச் செல்ல தடை விதித்தனர். பங்கு குருவானவர்,“நீ அவர்களிடம் பெயர் என்ன? என்று கேள்”என்றார்.





           1858, ஜøலை 16ஆம் தேதிக்குள் மொத்தம் 18முறை பெர்னதெத்திற்குக் காட்சி தந்தார் மரியா. அன்னை மரியிடம், “நீங்கள் யார்? உங்கள் பெயர் என்னவென்று சொல்வீர்களா?” என்றார். 16வது காட்சியின் போது அன்னை மரியாள்,“நாமே அமல உற்பவம், அதாவது நான் சென்மப் பாவமில்லாமல் உற்பவித்தவள்” என்று கூறி மறைந்தார். அங்கு அற்புதமான நீரூற்றும் உருவாயிற்று. அந்த நீரைப் பருகியோர் நோயிருந்து விடுதலை பெற்றனர். இப்புதுமையான காட்சி பற்றிய தகவல் பரவியதும், எல்லா திசையிலும் இருந்தும் மக்கள் அலையெனத் திரண்டு லூர்துநகர் நோக்கி வர ஆரம்பித்தார்கள். அன்னை மரியாவின்மீது அளவு கடந்தப் பக்தி வளரத் தொடங்கியதால் இது குறித்து ஆராய்வதற்காகத் தார்பஸ் மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் ஒரு குழுவை ஏற்படுத்தினார். பலதரப்பட்ட மக்களையும் நான்கு ஆண்டுகள் விசாரித்த அக்குழு தமது அறிக்கையை ஆயரிடம் கொடுத்தது. அறிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆயர் லாரன்ஸ் 1862ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் நாள்“பெர்னதெத் குகையில் கண்ட அனைத்தும் முற்றிலும் உண்மையே. மேலும் அவள் குகையில் கண்ட பெண்மணி வேறுயாருமல்ல, அது கன்னி மரியே” என்று உறுதிப்படுத்தினார். பல நிகழ்ச்சிகளுக்குப்பின் அங்கு ஆலயம் கட்டப்பட்டது. இதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான், 1854, டிசம்பர் 8ஆம் நாள் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர், “மரியா அமல உற்பவி” என்ற கோட்பாட்டை அறிக்கையிட்டார்.

No comments:

Post a Comment