Tuesday 31 July 2018

மரியா நம்பிக்கை கொண்டோரின் தாய்


   'விடிவெள்ளி' என்பது அதிகாலையில் வானில் தோன்றும் 'வெள்ளி' கோளைக் குறிக்கின்றது. கிழக்குத் திசையில் காட்சியளிக் கும் இந்தக் கோள், சூரிய உதயத்தை முன்னறிவிப்பதாக உள்ளது. பழங்காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டவர் கள் விடிவெள்ளியைக் கொண்டே திசையை அறிந்ததால், இது 'கடலின் விண்மீன்' என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே, மரியா என்றப் பெயரின் பொருளாகும். எனவே இயேசுவின் தாய் மரியாவை 'விடிவெள்ளி' என்று அழைப்பது, நேரடியாக அவரது பெயரையே குறித்து நிற்கிறது. இயேசு என்ற ஆதவனின் வருகையை முன்னறிவிக்கும் விடிவெள்ளியாகவே உலக வரலாற்றில் மரியா தோன்றினார்.
   
   சூரியனின் கதிர்களால் பிரகாசிக்கும் விடிவெள்ளியைப் போன்று, மரியாவும் இயேசுவின் ஒளியால் பிரகாசிக்கி றார். கதிரவனின் பண்புநலன்களை விடிவெள்ளி பிரதி பலிப்பது போல, இயேசுவின் மாட்சியைப் பிரதிபலிப்பவராக மரியா திகழ்கிறார். "இதனால் தான் திருச்சபையின் உயரிய, சிறப்புப்பெற்ற, முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த உறுப்பாக வும், நம்பிக்கை மற்றும் அன்பின் முன்குறியாகவும் மரியா போற்றப்பெறுகின்றார். கத்தோ லிக்கத் திருச்சபையும் தூய ஆவியினால் கற்பிக்கப்பெற்று, பிள்ளைக்குரிய வாஞ்சையோடும் பற்றோடும் அன்புநிறைத் தாயாக அவரை ஏற்கின்றது." (திருச்சபை எண். 53) "இவர் கிறிஸ்துவின் தாய், மக்களின் தாய், சிறப்பாக நம்பிக்கை கொண்டோரின் தாய்." (திருச்சபை எண். 54) 
  மரியா மனிதகுலத்தின் நெடும்பயணத்தில் நம்பிக்கை தரும் விடிவெள்ளியாக ஒளி வீசுகிறார். முதிர்ந்த வயதில் கருவுற்ற எலிசபெத்துக்கும், கானா ஊர் திருமண வீட்டினருக்கும் தேவையறிந்து உதவி செய்ததன் மூலம் மரியா நம்பிக்கையின் நட்சத்திரமாகத் திகழ்ந்தார். நமது வாழ்வில் இருள் சூழும் நேரங்களிலும், நம்பிக்கை தரும் விடிவெள்ளியாக வழிகாட்டவும் உதவி செய்வும் மரியா தயாராக இருக்கிறார். "இவ்வுலகில் ஆண்டவரது நாள் வரும்வரை, பயணம் செய்யும் இறைமக்கள் முன்பு உறுதியான நம்பிக்கை யின் அடையாளமாக மரியா ஒளிர்கின்றார்." (திருச்சபை எண். 68)

No comments:

Post a Comment