Tuesday 12 December 2017

புனித ஜேன் பிரான்செஸ் தே சாந்தால்



          உங்கள் இருதயம் இயேசுவின் இருதயத்தைப் போல கனிவும் தாழ்ச்சியும், இளகிய மனமும் கொண்டதாக மாற வேண்டும். மேலும் அன்னை மரியாவைப் போல பிறரன்புச் சந்திப்பில் நீங்களும் வளர வேண்டும் என்று கூறிய புனித சலேசியாரின் வார்த்தையை இறுதிவரை கடைப்பிடித்து இறைபக்தி முயற்சியில் சிறந்து விளங்கிய புனித ஜேன் பிரான்செஸ் தே சாந்தால். பிரான்ஸ் நாட்டில் டிஜோன் என்னும் இடத்தில் 1572ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 28ஆம் நாள் பிறந்தார்.

        

       இவரது தந்தை பர்கன்டி பாராளுமன்றத்தில் தலைவராக பணியாற்றினார். தாய் சிறுவயதிலேயே இழந்தார். தனது 20ஆம் வயதில் பரோன் தே சாந்தால் என்பவரை திருமணம் செய்தார். கிறிஸ்தவ மதிப்பிடுகளுக்கு சான்றாக வாழ்ந்த ஜேன் ஆறு குழந்தைகளுக்கு தாயானார். ஜேன் தனது பிள்ளைகளுக்கு இறைநம்பிக்கையை அமுதாய் ஊட்டினார். பிள்ளைகள் நற்பண்பில் வளர வழிகாட்டினார். தன் கணவரையும் பிள்ளைகளையும் அன்பு செய்தார். குடும்ப வாழ்வில் அன்பும் அமைதியும் அனைவருக்கும் பகிர்ந்தளித்து மகிழ்ச்சியின் நிறைவில் வாழ்ந்த இத்தருணத்தில் கணவனையும் மூன்று பிள்ளைகளையும் இழந்தார்.

     

      தான் வாழ்ந்த அரண்மனையின் பொறுப்பேற்றார். பிள்ளைகளை இறைபராமரிப்பில் வழி நடத்தினார். மறுமணம் செய்து கொள்ளாமல் இறைவேண்டலில் ஈடுப்பட்டார். பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய செயல்களை செம்மையாக செய்தார். பிள்ளைகள் சிறந்த முறையில் கல்வி கற்பித்தார். இறைபக்தியில் வளர வழிகாட்டினார். இடைவிடாமல் இறைவேண்டுதல் செய்த ஜேனை ஒருநாள் இறைவன் சந்தித்தார். இறைவன் ஒர் ஆன்ம குருவை ஜேனிற்குக் காட்டினார். மேலும் உனக்காக ஒதுக்கி வைத்திருக்கிறேன் என்று கூறினார். இத்தருணத்தில் தான் புனித பிரான்சிஸ் சலேசியாரை சந்தித்தார்.


           

       1604ஆம் ஆண்டு டிஜோன் சென்றார். புனித சலேசியாரின் மறையுரையைக் கேட்டார். அவரோடு உரையாடினார். அவரின் வழிகாட்டுதலால் செல்வ செழிப்பான வாழ்வை துறந்து துறவற வாழ்வை மேற்கொண்டார். இறைவனுக்காக தன்னை அர்ப்பணம் செய்தார். தனது பிள்ளைகளை தனது சகோதரரின் பொறுப்பில் ஒப்படைத்து துறவு மேற்கொண்டார். அவ்வாறு 1610ஆம் ஆண்டு புனித பிரான்சிஸ் சலேசியாரின் கரங்களிலிருந்து துறவு வாழ்கைக்கு தேவையான விதிமுறைகளை பெற்றுக்கொண்டார். விசிட்டேசன் சபை உருவானது. இறைவனுக்கு உகந்த முறையில் வாழ்ந்த ஜேன் 1641ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13ஆம் நாள் இறந்தார். திருத்தந்தை 13ஆம் கிளமண்ட் 1767ஆம் ஆண்டு ஜøலை 16ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.

No comments:

Post a Comment