Sunday 7 October 2018

செபமாலையின் அன்னை மரியா

       
   அனுதினமும் செபமாலை செபிக்கும்போது அன்னை மரியாளோடு நம் இதயம் இயேசுவின் மறையுண்மைகளை நோக்கிப் பயிற்சி பெறுகின்றது. செபமாலைத் தியானத்தில் நாம் ஒவ்வொரு மறையுண்மைகள் வழியாக இறைமகன் இயேசுவின் மீட்புச்செயலை தியானிக்கின்றோம். இறைவனின் மீட்புத்திட்டத்தில் கன்னி மரியாள் எவ்வாறு தன்பங்களிப்பை வழங்குகின்றாள் என்பதைத் தியானிக்கின்றோம். மீட்புச் செயலை முன்னெடுத்துச் செல்லும் திருச்சபையில் அன்னை மரியாவின் பங்களிப்பையும் பரிந்துரையையும் தியானிக்கின்றோம்செபமாலையின் மலர்கள் என்றும் அழுகிப்போகாது” என்கிறார் திருத்தந்தை 12ம் பத்திநாதர் - திருத்தந்தை இரண்டாவது அருள் சின்னப்பர் “கன்னி மரியாவுக்கு மிகவும் பிரியமான செபம் செபமாலை” என்கின்றார் - திருத்தந்தை 16ம் பெனடிக்ட் “மாலை நேரத்தில் செபமாலை செபிக்கும் குடும்பம் எவ்வளவு அழகானது” என்கிறார்.


       செல்லஸின் மடாதிபதி என்பவர் “அன்னை மரியா அருட்கொடைகளின் இருப்பிடம்.  அனைவரும் அன்னையிடம் செபிக்க வேண்டும். ஏனெனில் உலகமும் மனித இனம் முழுவதும் மாமரியிடம் மன்றாட வேண்டும். ஏனெனில் நாம் எதிர்நோக்கும் எல்லா நன்மையும் அன்னையின் கரங்கள் வழியாகவே பெற்றுக் கொள்கிறோம்” என்று கூறுகிறார். 13ஆம் நூற்றாண்டில் நன்மைகள் குறைந்து தீமைகள் பெருகியகாலம். தீமைகள் விளைவிக்கும் கொள்கைகள் நிறைந்த ஆல்பிஜென்ஸிய தப்பறை தலைதூக்கியது. இத்தப்பறைக்கு எதிராகக் குரல் கொடுக்க புனித சாமிநாதரை திருத்தந்தை மூன்றாம் இன்னசென்ட் அவர்கள் நியமித்தார். புனித சாமிநாதரின் போதனைகள் பலன் அளிக்கவில்லை. புனித சாமிநாதர் துலூஸ் நகருக்கு அருகிலுள்ள காட்டிற்குச் சென்று கண்ணீரோடு அன்னையிடம் உதவிக்காகவும், இறைவன் மக்களின் பாவங்களை மன்னிக்கவும் மன்றாடினார். தனது உடலை சாட்டையால் அடித்துக்கொண்டார்.  மக்களைப் புனிதப்படுத்தத் தன்னைப் புனிதப்படுத்தினார்.
     

        இத்தருணம் அன்னை மரியா மூன்று வானதூதருடன் தோன்றி “நீர் போதனை செய்யும் போது மக்கள் செபமாலை செபிக்கும்படிச் சொல். அதன் வழியாக உம் வார்த்தைகள் ஆன்மாக்களில் விழுந்து மிகுந்த பலனைக் கொடுக்கும்” என்றார். அன்னை மரியா செபமாலை எப்படி செபிக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தார். புனித சாமிநாதரும் செபமாலை செபித்தார். மக்களுக்கு செபமாலை செபிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொடுத்தார். மக்கள் புனிதமான வாழ்க்கை வாழ வழிகாட்டினார். இறைவனின் அன்பையும் ஆசீரையும் நிறைவாகப் பெற்றிட வழிகாட்டினார். மக்களும் ஆர்வமாய் செபமாலை  செபித்தார்கள். தீமைகள் அகன்று நன்மைகள் பெருகின. அவ்வாறு செபமாலையின் வழியாக அல்பிஜென்ஸியத் தப்பறையும் முறியடிக்கப்பட்டது. செபமாலை என்பது ‘ஏழைகளின் திருப்பாடல்’ மற்றும் ‘நற்செய்தியின் சுருக்கம்’என்று அழைக்கப்படுகிறது. திருத்தந்தை 13ஆம் சிங்கராயர் லோரெட்டோ மன்றாட்டு மாலையில் செபமாலையின் அரசியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்று செபித்தார். திருத்தந்தை 10ஆம் பத்திநாதர் “செபமாலை ஆண்டவரிடமிருந்து நமக்கு வரங்களைப் பெற்றுத்தரும். நாம் செபிக்கும் செபங்களிலேயே அழகானதும் வளமையானதும் செபமாலையே. அது கடவுளின் தாயான அன்னை மரியாவின் உள்ளத்தைத் தொடும் செபம். எனவே தினமும் செபமாலை சொல்லுங்கள்” என்று கூறினார். செபமாலை வழியாக இறைவனின் அருளைப்பெற்று புனிதமடைவோம்.                                                       

No comments:

Post a Comment