Saturday 28 October 2017

அன்னை மரியா அமல உற்பவி

           “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் இடையே பகையை உண்டாக்குவோம். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்” (தொ.நூல் 3:15) என்று இறைவன் பாம்பிடம் கூறினார். அலகையை அழிக்கும் அவளது வித்து என்பது இயேசு கிறிஸ்துவே. அந்தத் தாய் அன்னை மரியா. இவரே பாம்பின் தலையை நசுக்கி, அழிக்க முன்குறிக்கப்பட்டவர். எனவே அன்னை மரியா நிச்சயமாகவே தன் பிறப்பு முதல் பாவக்கறையற்று பிறந்திருப்பார். 1839ஆம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் “பாவக்கறையற்று கருவான அரசியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்” என்று செபித்தார்.

       மேலும் “மிகவும் பேறுபெற்ற கன்னிமரியா கருவான முதல் நொடியிருந்தே, எல்லாம் வல்ல இறைவனுடைய தனிப்பட்ட அருளாலும், சலுகையாலும் மனித குலத்தின் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களை முன்னிட்டுச் சென்மப் பாவத்தின் எல்லாக் கறையினின்றும் விடுவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டார். இக்கோட்பாடு இறைவனால் வெளிப்படுத்தப்பட்டதாகும். எனவே, இது எல்லா விசுவாசிகளாலும், உறுதியாக இடைவிடாது விசுவசிக்கப்பட வேண்டும் என்பதை நாம் அறிக்கையிடுகிறோம், அறிவிக்கிறோம், வரையறுக்கிறோம்” என்று திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் 1854ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 8ஆம் நாள் அறிவித்தார்.

            பெர்னதெத்தின் தந்தை கடுங்குளிரினால் நோயுற்றார். மருத்துவம் செய்ய வசதியில்லை. தந்தையின் அறையில் அனல் மூட்டுவதற்கான விறகுகள் இல்லை. தந்தையின்மீது கொண்ட பாசத்தால் தாயின் அனுமதியுடன் தனது தங்கை மேரி, அண்டை வீட்டுப் பெண் யோவான் ஆகியோருடன் சேர்ந்து விறகு சேகரிக்க கேவ் ஆற்றங்கரைப் பகுதிக்குச் சென்றார். அப்பகுதியில் தண்ணீர் குகை இருந்தது. அது மசபியேல் குகை எனப்பட்டது. தண்ணீர் குகையைக் கடந்து செல்ல வேண்டும். மேரி, யோவான் தண்ணீர் குகையை எளிதில் கடந்தனர். பெர்னதெத் குளிரால் தண்ணீரில் கால் வைக்கத் தயங்கி நின்றார். அப்போது பலமான காற்று வீசியது சுற்றிலும் பார்த்தார்.
          

        அருகிலிருந்த குகையில் ஓர் அற்புதமான காட்சியைக் கண்டார். “அமல உற்பவியான அன்னை மரியா, எழில் மிக்க ஓர் இளம் பெண்ணாகத் தோற்றமளித்தார். அன்னை மரியின் முகம் விண்ணக ஒளியினால் பிரகாசித்தது. நீண்ட வெள்ளைநிற ஆடையணிந்து, இடையில் நீலநிற இடைக்கச்சைக் கட்டியிருந்தார். பாதங்கள் மஞ்சள் நிற ரோஜா மலர்களால் அழகு செய்யப்பட்டிருந்தன. கரத்தில் செபமாலை தொங்கியது. அன்னை மரியா பெர்னதெத்தை தன்னுடன் சேர்ந்த்து செபமாலை செபிக்க அழைத்தார்”.  சிறிது நேரத்திற்குப் பின்னர் அன்னை மரியா மறைந்தார். இவ்வாறு பல நாட்கள் தோன்றினார். 

           

        விறகு சேகரிக்கச் சென்ற பெர்னதெத், அன்னை மரியாவைத் தரிசித்தார். இந்த செய்தியைக் கேட்ட சிலர் நம்பினார்கள். பலர் ஏளனமாகப் பேசினர். திரளானோர் அவருடன் அன்னையைத் தரிசிக்கச் சென்றார்கள். பலமுறை மகிழ்ச்சியோடு காட்சியளித்த அன்னை மரியா, ஒரு நாள் முகத்தில் பெரும் துயரத்துடன் காணப்பட்டார். பெர்னதெத் “அம்மா! ஏன் இன்று வருத்தமாக இருக்கின்றீர்கள்”  என்றார். “மகளே! உலகில் எண்ணற்ற மக்கள் கடவுளைப் புறக்கணித்து பாவம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் மனம் மாற நீ செபமாலை செபிக்க வேண்டும்” என்றார். 

       

        மற்றொரு நாள், “தவம்! தவம்! தவம்!” என்று அன்னை கூறினார். அன்னையின் அறிவுரைக்கேற்ப, “பாவிகள் மனம்மாற செபமாலை செபிக்கவும், தவ முயற்சிகள் செய்வேன்” என்று உறுதிகொண்டார். இதைக் கேள்விப்பட்ட சபைத் தலைவர்கள், காவலர்கள் பெர்னதெத்தைக் குகைக்குச் செல்ல தடை விதித்தனர். பெர்னதெத்தின் தந்தை தன் மகள் இறையொளியால் வழி நடத்தப்படுகிறார் என்பதை உணர்ந்து குகைக்குச் செல்ல அனுமதித்தார்.
    

             பங்கு குருவானவர், “நீ அவர்களிடம் பெயர் என்ன? என்று கேள்” என்றார். 1858, ஜøலை 16ஆம் தேதிக்குள் மொத்தம் 18 முறை பெர்னதெத்திற்குக் காட்சி தந்தார். அன்னை மரியிடம் “நீங்கள் யார்? உங்கள் பெயர் என்னவென்று சொல்வீர்களா?” என்றார். 16வது காட்சியின் போது அன்னை மரியாள், “நாமே அமல உற்பவம், அதாவது நான் சென்மப் பாவமில்லாமல் உற்பவித்தவள்” என்று கூறி மறைந்தார். 

      

      அங்கு அற்புதமான நீரூற்றும் உருவாயிற்று. அந்த நீரைப்பருகியோர் நோயிருந்து விடுதலை பெற்றனர். இப்புதுமையான காட்சி பற்றிய தகவல் எங்கும் பரவியதும். நான்கு திசையில் இருந்து மக்கள் அலையெனத் திரண்டு லூர்துநகர் நோக்கிவர ஆரம்பித்தார்கள். அன்னை மரியாமீது அளவு கடந்தப் பக்தி வளரத் தொடங்கியதால் இது குறித்து ஆராய்வதற்காகத் தார்பஸ் மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் ஒரு குழுவை ஏற்படுத்தினார்.

    

       பலதரப்பட்ட மக்களை நான்கு ஆண்டுகள் விசாரித்த அக்குழு தமது அறிக்கையை ஆயரிடம் கொடுத்தார்கள். அறிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆயர் லாரன்ஸ் 1862ஆம் ஆண்டு, “பெர்னதெத் குகையில் கண்ட அனைத்தும் முற்றிலும் உண்மையே. மேலும் அவள் குகையில் கண்ட பெண்மணி பிரகடனப் படுத்தியது அது வேறு யாருமல்ல, அது கன்னி மரியே” என்று உறுதிப்படுத்தினார். 

          

             பல நிகழ்ச்சிகளுக்குப் பின் அங்கு ஆலயம் கட்டப்பட்டது. “மிகவும் பேறுபெற்ற கன்னிமரியா கருவான முதல் நொடியிருந்தே, எல்லாம் வல்ல இறைவனுடைய தனிப்பட்ட அருளாலும், சலுகையாலும் மனித குலத்தின் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களை முன்னிட்டுச் சென்மப் பாவத்தின் எல்லாக் கறையினின்றும் விடுவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டார். இக்கோட்பாடு இறைவனால் வெளிப்படுத்தப்பட்டதாகும். எனவே, இது எல்லா விசுவாசிகளாலும், உறுதியாக இடைவிடாது விசுவசிக்கப்பட வேண்டும் என்பதை நாம் அறிக்கையிடுகிறோம், அறிவிக்கிறோம், வரையறுக்கிறோம்” என்று திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் 1854ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 8ஆம் நாள் அறிவித்தது முற்றிலும் உண்மையே.  

No comments:

Post a Comment