Tuesday, 14 October 2025

இதயத்தில் அருள்சுரக்கும் இறைவார்த்தை

  

    மனிதன் உயிர்வாழ்வதற்கு அவசியமானது இதயம். அதுபோல ஆன்மா உயிர்வாழ்வதற்கு அவசியமானது இறைவார்த்தை. உலகம் உருவானதும் மனிதனுள் உயிர் மூச்சானதும் கன்னி மரியாவின் வயிற்றில் கருவானதும் இயேசு கற்பித்ததும் இறைவார்த்தையே. இறைவார்த்தை ஆன்மாவின் உணவாகவும், நம்பிக்கையின் உறுதிப்பாடாகவும், அருள்வாழ்வின் திறவுகோலாகவும், பாதைக்கு வழியாகவும், அருள்சுரக்கும் இதயமாகவும் செயல்படுகிறது.

    புனித இலாரி, “திருப்பாடல்கள் மற்றும் இறைவாக்கினர் நூல்களை வாசித்தபோது கடவுளின் ஆற்றல், வலிமை, இரக்கம் மற்றும் அவரின் அழகைக் கண்டுகொண்டேன்என்கிறார். புனித வின்சென்ட் பல்லொட்டி, “இறைவார்த்தை வாழ்க்கையின் அடித்தளம்என்கிறார்.

    குழந்தை இயேசுவின் புனித தெரசா, “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் (மத்18:3) என்னும் இறைவார்த்தையால் ஆட்கொள்ளப்பட்டு அன்பின் சிறிய வழியை பின்பற்றினார். எப்போதும் புன்னகையுடன் நேர்மையானவராக வாழ்ந்தார். கார்மல் துறவு சபையில் சேர்ந்து இறைவனின் அன்புக்கு தன்னை பலியாக அர்ப்பணித்தார். அருள்சுரக்கும் இறைவார்த்தையை இதயத்தில் சுமந்து ஒரு மறைபரப்பு பணியாளராக வாழ்ந்தார். நற்செயல்கள் வழியாக ஆன்மாக்களை மீட்டு திருஅவையின் மறைவல்லுநரானார்.

    புனித பெரிய பாசில் வாழ்வு முழுவதும் இறைபணி செய்ய விரும்பினார். நற்செய்தியை ஆர்வத்துடன் வாசித்து தியானித்தார். அவரது இதயத்தில் அருள்சுரக்கும் இறைவார்த்தை செயல்பட்டது. தமது செல்வங்களை ஏழைகளுக்கு கொடுத்து நற்செய்தி பறைசாற்றினார். செபம், தவம், உழைப்பு என்ற பன்முகத் தன்மையுடன் சமூகத்தில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தினார். இந்த வாழ்வின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் கைவிடுவதும், உலகக் காரியங்கள் மீது ஆவல் கொள்ளாதபடி ஆன்மாவை காத்துக்கொள்வதுமே வாழ்வின் நிறைவை அடைவதற்கான வழி என்பதை, நற்செய்தியை வாசித்து உணர்ந்துகொண்டேன்என்றார்.                               

அருள்வாழ்வு

 


    மானிடரின் மகத்தான வாழ்வு தூய வாழ்விற்கான அழைப்பு. நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் கடவுளின் திருமுன் வாழ்வதற்கு இயேசு கிறிஸ்து வழியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். இதுவே கடவுளின் திருவுளம். கடவுளின் திருவுளம் எதுவெனத் தேர்ந்து தெளிந்து, எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்று உணர்ந்துகொள்ள வேண்டுமெனில் அருள்வாழ்வின் வாய்க்கால் கண்டடைந்து அருள்வாழ்வு வாழ வேண்டும்.

   கடவுளின் மாபெரும் கொடையான இவ்வாழ்வு வெறுமனே ரசிப்பதற்காகவோ, இன்பங்களை அனுபவிப்பதற்காகவோ மட்டும் அல்ல. மாறாக அருள்வாழ்வு வழியாக என்றும் வாழும் கடவுளுக்கு சான்று பகர்வதற்கே. அருள்வாழ்வு வாழ்வது அவ்வளவு சுலபமல்ல. அது மாபெரும் சவால்களை உள்ளடக்கியது. சோதனைகளை வெல்லாமல் சாதனைகளை கைக்கொள்ள முடியாது. சிகரம் ஏறாமல் சிம்மாசனத்தில் அமர முடியாது. அதுபோல இறை மனித உறவில் அருளில் வளராமல் அருள்வாழ்வுக்கு சான்று பகர இயலாது.

 அருளில் வளர வயது வரம்போ, பணம் பட்டமோ, செல்வம் பதவியோ எதுவும் தேவையில்லை. மாறாக கடவுளையும், அயலானையும் அன்பு செய்யவேண்டும். இறைவார்த்தைக்கும் நற்கருணைக்கும், திருச்சிலுவைக்கும் இயேசு நாமத்திற்கும், அன்புக்கும் இரக்கத்திற்கும், இறைவேண்டலுக்கும் மனமாற்றத்திற்கும், இலக்குமிகு அர்ப்பண வாழ்வுக்கும், ஐம்புலன்களை வென்று கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் ஆகியவற்றை கடைப்பிடித்து அடைக்கலமருளும் அன்னை மரியாவிடம் நம்மை அர்ப்பணம் செய்யவேண்டும்.

    புனித தோமினிக் சாவியோ அன்றாட வாழ்வில் இறைவனுக்கும் இறைவார்த்தைக்கும் முதலிடம் கொடுத்தார். சிறிதோ பெரிதோ அனைத்து செயல்களையும் இறைவனின் மகிமைக்காகவும், ஆன்மாக்களின் மீட்புக்காகவும் அர்ப்பணித்தார். “பாவம் செய்வதைவிட இறப்பதே மேல்என்று கூறி இடைவிடாமல் நற்கருணை ஆண்டவரை ஆராதித்து அருள் பெற்றார். புனித வாழ்வு வாழும் தனது இலக்கை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து இடைவிடாமல் இறைவேண்டல் செய்தார். நான் இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உலகம் முடியும்வரை என்னோடு வாழும் இயேசுவே போதுமானவர். அன்னை மரியே எனது இதயத்தை உமது இல்லமாக மாற்றியருளும்என்று நாள்தோறும் செபித்து அருள்வாழ்வு வாழ்ந்தார்.

    புனித பிரான்சிஸ் அசிசி இறைவார்த்தை, நற்கருணை, திருச்சிலுவை மற்றும் அன்னை மரியா ஆகியவற்றிற்கு வாழ்வில் முதலிடம் கொடுத்தார். இதயத்தில் இறைவனின் குரல் கேட்டு மனமாற்றம் அடைந்தார். கடந்த காலத்தை கடவுளின் இரக்கத்திற்கு அர்ப்பணித்து அருள் பெற்றார். கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் ஆகியவற்றை பின்பற்றினார். இயேசுவின் ஆன்மாக்களுக்கான தாகம் தணிக்க இடைவிடாமல் செபம், தவம், ஒறுத்தல் செய்தார். அன்னை மரியாவின் கரம் பிடித்து கிறிஸ்துவை பின்பற்றுவதிலும், திருஅவைக்கு கீழ்ப்படிவதிலும் அனைவருக்கும் முன்மாதிரியானார். தனது உடமைகள் அனைத்தையும் ஏழைகளுக்கு கொடுத்தார். படைப்பனைத்தையும் சகோதர சகோதரியாக நேசித்தார். ஏழ்மையை தன் காதலியென்றும், ஏழைகளை உடன் பிறந்தோரென்றும், மரணத்தை அன்பு சகோதரியென்றும் அழைத்தார். பகைமை உள்ள இடத்தில் பாசத்தையும், மனவேதனை உள்ள இடத்தில் மன்னிப்பையும், ஐயமுள்ள சூழலில் விசுவாசத்தையும், இருள் சூழ்ந்த இடத்தில் கிறிஸ்துவின் ஒளியையும், துயரம் நிறைந்த இதயத்தில் மகிழ்ச்சியையும் விதைத்தார். இயேசுவின் ஐந்து திருக்காயங்களையும் தனது உடலில் பெற்று இவ்வுலகின் கடைநிலை மனிதராகவும், அருள்வாழ்வின் முதல் மனிதராகவும் வாழ்ந்து இரண்டாம் கிறிஸ்துவானார்.

                உலகம் பெயர், புகழ், பணம், பட்டம், பதவி ஆகியவற்றை நோக்கி ஓடுகின்றபொழுது தந்தை கடவுளின் மாட்சியைத் தரணிக்கு தந்த இயேசு கிறிஸ்துவை அறிந்து அனுபவித்து அருள்வாழ்வு வாழ்வோம். கடவுளின் அருளினால் உள்ளத்தை உறுதிப்படுத்துவோம். இறை மனித உறவில் வளர்வோம். அகிலத்தில் அமைதியை ஏற்படுத்துவோம். அன்பு, நம்பிக்கை, எதிர்நோக்கு ஆகிய இறையியல் புண்ணியங்களை வாழ்க்குவோம். அன்னை மரியா மற்றும் புனிதர்களைப் போல நற்செய்தியின் சாட்சிகளாக வாழ்ந்து கடவுளின் கரத்தில் அழகிய மணிமுடியாகத் திகழ்வோம்.

Thursday, 1 December 2022

புனித எட்மண்ட் காம்பியன் மற்றும் தோழர்கள்

    

    புனித எட்மண்ட் காம்பியன் லண்டன் நகரில் ஜனவரி 25ஆம் நாள் பிறந்தார். கத்தோலிக்க திருச்சபை மீது ஈர்ப்பு கொண்டிருந்தார். தோவாய் பல்கலைக்கழகத்தில் தெயவீகத்தன்மை பாடத்தில் பட்டம் பெற்றார். இயேசு சபை கல்லூரியில் 6 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். 1573ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்றார். 1580ஆம் ஆண்டு நகை வியாபாரி வேடமிட்டு நற்செய்தி பணிக்காக இங்கிலாந்து சென்றார்.

 

    குருக்களோடு இணைந்து அருளடையாளங்கள் வழி மக்களை தூய வாழ்வுக்கு வழிகாட்டினார். நற்செய்தியையும், கத்தோலிக்க விசுவாசத்தையும் போதித்தார். ஆங்கலிக்கன் திருச்சபையின் உண்மைத் தன்மையை ஏற்க மறுத்ததால் 1581ஆம் ஆண்டு ஜøலை 15ஆம் நாள் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை செய்தனர். 1581ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் நாள் எட்மண்ட் காம்பியன் மற்றும் அவரது தோழர்களையும் தலையை வெட்டி கொலை செய்தனர்.

Wednesday, 4 August 2021

புனித ஜாண் மரிய வியான்னி

 

நற்கருணையின் முன்னால் செலவிடும் நேரத்தைப் பொன்னான நேரமாகக் கருதவேண்டும் என்றுகூறி அவ்வாறே வாழ்ந்தவர். இறைமக்களுக்கு விண்ணகம் செல்ல பாதை காட்டியவர்.  நான் குருவானால் கடவுளுக்காக ஏராளமான ஆன்மாக்களை வென்றெடுப்பேன் என்ற கூறியவர். பங்கு குருக்களின் முன்மாதிரியாக வாழ்ந்தவரே புனித ஜாண் மரிய வியான்னி. இவர் பிரான்ஸ் நாட்டில் இலயன்ஸ் நகரில் டார்டிலி என்ற கிராமத்தில் 1786ஆம் ஆண்டு மே திங்கள் 8ஆம் நாள் பிறந்தார். தமது 13ஆம் வயதில் நற்கருணை பெற்றுக்கொண்டார். குருவாகப் பணிசெய்ய விரும்பினார். இறையியல் படிப்பையும் இலயன்ஸ் நகரில் முடித்தார். 1815ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் நாள் ஜாண் மரிய வியான்னி குருவாக அருள்பொழிவு பெற்றார். 

    ஜாண் மரிய வியான்னி ஆர்ஸ் என்ற சிற்றூரின் பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்டார். ஆர்ஸ் கிராமம் செல்ல வழி தெரியாமல் திகைத்தபோது ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வழிகாட்டினான். தனக்கு வழிகாட்டிய சிறுவனிடம், ஜாண் மரிய வியான்னி, “நீ எனக்கு ஆர்சுக்கு வழிகாட்டினாய். நான் உனக்கு விண்ணகத்திற்கு வழிகாட்டுவேன்” என்றார். வீடு வீடாய் சென்று மக்களைச் சந்தித்தார். காலையில் முதல் மாலைவரை ஆலயத்தில் செபித்தார். நோயாளிகளையும் அவர்களது இல்லங்களையும் தவறாமல் சந்தித்தனார். பங்கின் பாதுகாவலர் விழாவைச் சிறப்பாக கொண்டாடினார். ஆதரவற்றோரைப் பராமரிக்க இறைபராமரிப்பு இல்லம் தொடங்கி கவனித்தார். குழந்தைகளுக்கு கல்வி புகட்டினார். தனது மறையுரையில் ‘விண்ணகம்’ என்ற சொல்லை அதிகம் பயன்படுத்தினார். 

  பிறரைப் புனிதப்படுத்த தன்னை புனிதப்படுத்தினார். மரிய வியான்னியின் செப, தவ முயற்சியின் பலனாக ஆர்ஸ் சிற்றூர் மறைமாவட்டத்திலேயே ஒரு முன்மாதிரியான பங்குதளமாக 1835இல் அறிவிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே உறங்கினார். கரடு முரடான படுக்கையில் படுத்து உறங்கினார். உணவிற்காக ஒரு சில வேகவைத்த உருளைக் கிழங்குகளை உண்டார். அலகையின் துன்புறுத்தல்களுக்கு ஆளானார். 1859, ஜøலை 29ஆம் நாள் தனது அன்றாட அலுவலான போதிக்கும் பணி மற்றும் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கும் பணியை முடித்து படுக்கைக்கு திரும்பினார். இறையன்பராக, ஏழ்மையின் இலக்கணமாக வாழ்ந்த ஜாண் மரிய வியான்னி 1859ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் நாள் இயற்கை எய்தினார். 

Monday, 2 August 2021

புனித வால்தியோஃப்

 புனித வால்தியோஃப் 1095ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோரின் அன்பில் வளர்ந்து பக்தியுடன் ஆலயம் சென்று செபித்தார். அரண்மனையில் வாழ்ந்தாலும் ஆடம்பரமின்றி எளியவராக வாழ்ந்தார். தூயவரான ஆல்ரெட் என்பவரை பின்பற்றி 1130ஆம் ஆண்டு அகுஸ்தினார் துறவு மடத்தில் சேர்ந்து செபம், தவம், ஒறுத்தல்கள் செய்தார். 

    தன்னலமற்ற தலைவராகவும் அன்பின் சேவகராகவும் பணிவுடன் அனைவருக்கும் பணிவிடை செய்தார். ஆயர் பதவி தன்னை தேடிவந்தபோது தாழ்ச்சியுடன் நான் தகுதியற்றவன் என்று கூறினார். இறையன்பும், கனிவும், இரக்கமும் தனதாக்கி எல்லாருக்கும் இறைபிரசன்னத்தை பகிர்ந்து அனைவரின் நன்மதிப்பையும் மரியாதையும் பெற்றார். மக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்கு ஆயராது உழைத்த வால்தியோஃப் 1160ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் நாள் இறந்தார்.                                                                        

Saturday, 31 July 2021

புனித லொயோலா இஞ்ஞாசியார்


   புனித இஞ்ஞாசியார் ஸ்பெயினில் 1491இல் டிசம்பர் 27ஆம் நாள் பிறந்தார். 15ஆம் வயதில் ஸ்பெயின் நாட்டு அரசவையில் போர் வீரரானார். 1521இல் பம்பலூனா கோட்டையைப் பிரெஞ்சுகாரரிடமிருந்து காப்பாற்றும் போரில் அவரது கால்கள் ஊனமுற்றன. ஓய்வு எடுத்தபோது விவிலியம், புனித பிரான்சிஸ் அசிசியார், புனித சாமிநாதார் சரிதை படித்து மனந்திரும்பினார். 

    1522இல் மார்ச் 25ஆம் நாள் அன்னை மரியா வழி இயேசுவுக்கு தன்னை அர்ப்பணித்தார். குருவாக அருள் பெற்று படித்தோருக்கும், பாமரருக்கும் நற்செய்தி போதித்தார். தவறிய பெண்களுக்கு வழிகாட்டி, நோயுற்றோரை நலமாக்கினார். ஒருநாள் 7 மணிநேரம் இறைவனோடிருந்தார். 1534இல் இறை இயேசுவின் சேவகர்கள் சபை தொடங்கினார். இதயத்தில் இயேசுவை சுமந்து அயலானின் மீட்புக்காகவும், இறைவனின் அதி உன்னத மகிமைக்காகவும் இறையாட்சி பணி செய்து 1556, ஜூலை 31ஆம் நாள் இறந்தார்.     

Tuesday, 20 July 2021

புனிதர்களான எலியாஸ், ஃபிளேவியன்

    புனிதர்களான எலியாஸ் மற்றும் ஃபிளேவியன் வீசுவாத்தின் வீரரார்கள். எலியாஸ் அரபு நாட்டில் பிறந்து துறவு மடத்தில் கல்வி கற்று விசுவாசத்தில் வளர்ந்தார். 457ஆம் ஆண்டு பாலஸ்தீனாவிற்கு சென்று யுத்திமுஸ் என்பவரின் உதவியில் வாழ்ந்தார். ஜெரிக்கோ என்ற குழுமத்தை நிறுவினார். குருத்துவம் வழி இறைவனின் திருவுளம் நிறைவேற்றினார். 494இல் எருசலேம் மறைத்தந்தையானார். அந்தியோக்கு மறைத்தந்தை ஃபிளேவியன் என்பவருடன் தோழமை உறவு கொண்டிருந்தார். இரண்டு மறைத்தந்தையர்களும் ஓரியல்பு கோட்பாடு எதிராக குரல் கொடுத்தனர். பேரரசர் முதலாம் அனஸ்தாசியுஸ் ஓரியல்பு கோட்பாட்டை ஆதரித்தார். பேரரசர், எலியாஸ் மற்றும் ஃபிளேவியன் இருவரையும் ஓரியல்பு கோட்பாட்டை ஏற்றுக்கொள்வதாகக்கூறி ஆவணத்தில் கையொப்பம் போட சொன்னார். மறுத்த எலியாஸ், ஃபிளேவியன் இருவரையும் 516ஆம் ஆண்டு அய்லா என்ற இடத்திற்கு நாடுகடத்தினார். செல்லும் வழியில் ஃபிளேவியன் இறந்தார். அய்லாவில் எலியாஸ் இறந்தார்.